
யாழ்ப்பாணம், பெப் 3: இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அடாவடிகளைக் கண்டித்தும்,சம்மந்தப்பட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியு,ம் யாழ்ப்பாண செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஆளுநர் இல்லம் ஆகியனவும் மீனவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துவோம்’ என்று, வடக்கு ஆளுநர், கடல் தொழில் அமைச்சர், கடற்படையின் மூத்த அதிகாரிகள் நேரில் வந்து உத்தரவாதம் தரும் வரை போராட்டக் களத்தை விட்டு அகலப் போவதில்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தால், யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான வாயில்கள் மூன்றும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், யாழ். மாவட்ட செயலகப் பணிகள் முடங்கியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய ரோலர் படகு மோதி, வடமராட்சி கிழக்கு வத்திராயனைச் சேர்ந்த 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து வடமராட்சியில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படன. இந்நிலையில், யாழ் நகரில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால், ஏ-9 ஊடான போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்படுள்ளது.