யாழின் அனைத்து கிராமங்களுக்கும் அபிவிருத்தி..! அங்கஜன் இராமநாதன் ஆரம்பித்து வைத்தார்

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்ட பணிகள்” மாவட்டத்தின் 435 கிராமங்களிலும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இத்திட்டத்தின் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கு அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்தின்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ச கண்காணிப்பில்,

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வழிகாட்டுதலில், எமது அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 3 மில்லியன் ரூபாய் நிதியானது, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமங்களின் தேவைகள் கிராமத்துக்கு கிராமம் மாறுபடும் என்பதை உணர்ந்து, யாழ் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் தன்னிறைவான அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் 18 நாட்கள், 216 மணித்தியாலங்கள், 3023 கிலோ மீற்றர்கள் பயணித்து 15 பிரதேச செயலக பிரிவுகளின் 435 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து, மக்களிடம் அவர்களின் நியாயமான தேவைபாடுகளை கேட்டறித்து, மக்கள் முன்னிலையிலேயே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வேலைத்திட்டங்களை பரிந்துரை செய்திருந்தோம்.

இதனூடாக கிராமத்தின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி என்பன எதிர்காலத்தில் வளர்ச்சிப்போக்கை எட்டவுள்ளது.

கிராமங்கள் வளர்ச்சியடைந்தால், மக்களின் பொருளாதாரம் மேம்படும், அதனூடாக மாவட்டமும் நாடும் பொருளாதார மீட்சியை பெற்றுக்கொள்ளும்.

வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் அபிவிருத்தியை ஆரம்பிக்கும் இந்நிகழ்வு நடைபெறும் சமகாலத்தில், எமது மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரா போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது நியாயமான கோரிக்கை குறித்து உண்மையில் நாம் எல்லோரும் அக்கறை கொண்டுள்ளோம்.

கடல்வளத்தை பாதுகாப்பதோடு, கடற்றொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் பாதுகாப்பது தொடர்பில் மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் என்ற அடிப்படையிலும் மிகுந்த கரிசனை கொண்டுள்ளேன்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சனை தொடர்பாகவும், இம்மக்களின் நீண்டகால கோரிக்கை தொடர்பிலும், ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

கடந்த ஜனவரி 31ம் திகதி, யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த கௌரவ வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் G.L பீரிசிடம் இவ்விடயம் தொடர்பான எம்மக்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தேன்.

மேலும் உயிரிழந்த, தர்மகுமார் தணிகைமாறன், ஜோசெப் பிரேம்குமார் ஆகிய மீனவ சகோதரர்களின் வீட்டுக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தினர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் எனது துயரத்தை பகிர்ந்துகொண்டதோடு, அக்குடும்பத்துக்கான வருமானத்தை உறுதிசெய்யும் வகையில், பிரதேச செயலகத்தினூடாக வாழ்வாதார உதவித்திட்டமொன்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறு, கிராம சேவையாளரிடமும், மருதங்கேணி பிரதேச செயலாளரிடமும் வலியுறுத்தியுள்ளேன். எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் திரு. க. மகேசன், மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு. ம. பிரதீபன், பிரதேச செயலாளர் திரு. சுதர்சன் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம மட்ட உத்தியோதர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புகுழு அதிகாரிகள், அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் இத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *