
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கு முறையிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மருத்துவருடன் நான் தொலைபேசி மூலம் கதைத்த விடயங்களை பதிவு செய்து அதனை சமுக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.
மருத்துவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் மிகவும் நாகரிகமான முறையில் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.
ஆனால் தனது அனுமதி எதுவுமின்றி அந்த தொலைபேசி உரையாடலை அவர் சமுக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்- என்றுள்ளது.
மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை:
கிளிநொச்சியில் கிராமப் புறம் ஒன்றில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
சுமார் 300 மேற்பட்ட மாணவர்களுக்கு தனியார் கண் சிகிச்சை நிறுவனம் ஒன்றால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பிரச்சனை உள்ளது, அவர்களுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும் போன்ற செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை அறிந்த M.0.H மருத்துவர் பிரியாந்தினி ,மாவட்ட வைத்தியசாலையில் மாணவர்களை பரிசோதனைக்கு அனுப்பு உண்மை நிலையை கண்டறிந்து,கண் சிகிச்சை நிறுவனங்கள் சில இவ்வாறு மாணவர்களை வைத்து மாபியா வேலை செய்கிறது என்ற உண்மையை கொண்டுவந்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த மருத்துவருக்கு தொலைபேசியில் சில மர்மநபர்கள் மிரட்டல் விடுத்ததாக , தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவரை மிரட்டியமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு,
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் மிரட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!