தெங்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகமை மருத்துவப் பீடத்தின் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜாங்க அமைச்சரின் புதல்வர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக ராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். 23 வயதான சந்தேக நபர் தங்கொட்டுவை வளவ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சரின் புதல்வரை அடையாளம் காண வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் அடையாளம் காணும் அணி வகுப்பை நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராகமை மருத்துவப் பீட ஆண்கள் விடுதிக்குள் நேற்று இரண்டு வாகனங்களில் சென்ற சுமார் 15 பேர், அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சம்பவத்துடன் தொட்புடைய ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் தனிப்பட்ட ஊழியர் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்டார்.
