யுத்தம் முடிவுக்கு வந்த ஒரு வாரத்திற்குள் இலங்கை அளித்த வாக்குறுதிகள் எங்கே? 47 நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பந்தன் எம்.பி. கடிதம்

‘சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நடைமுறையை செயல்படுத்துவதாக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வாரத்துக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும், 12 வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.’

-இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயுதம் தாங்கிய இன மோதல் முடிவுற்ற ஒரு வாரத்தினுள் 2009 மே 23 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் இலங்கை அரசாங்கத்தினாலும் ஐக்கிய நாடுகளினாலும் ஏனைய பல விடயங்களோடுகூடவே பின்வருமாறு கூறும் ஒரு கூட்டறிக்கை விடுக்கப்பட்டது.

‘சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கும் அமைவாக, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான தனது வலுவான கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியது.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை கையாள்வதற்கான ஒரு பொறுப்புக்கூறல் நடைமுறையின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார். அப்பிரச்சினைகளைக் கையாண்டு தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’.

மேற்காணும் கடப்பாடுகளை கையாண்டுத் தீர்ப்பதற்கு எதுவித காத்திரபூர்வமான நடவடிக்கைகளையும் இலங்கை கடந்த பன்னிரெண்டு வருடங்களில் மேற்கொள்ளவில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2021 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தோடு, ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இதனிடையே இலங்கை பெருமளவுக்கு அமுல்படுத்தப்படாத பல்வேறு கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளது. பொறுப்புக் கூறல் விடயத்தைக் கையாண்டு தீர்க்காதுவிட்டதற்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கமானது, இராணுவமயப்படுத்தல், சிவில் சமூக மற்றும் ஊடகத் துறையினர் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அத்துடன், தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் ஏனையவர்கள் ஆகியோரைப் புதிதாகக் கைது செய்வதோடு, கூடவே அரசியல் கைதிகளை காலவரையறையற்று தடுத்து வைத்திருத்தல், பல்வேறு அரசாங்க திணைக்களங்களின் செயல்பாடுகள் மூலமாக இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்தம் காணிகளில் மீளக் குடியேற விடாது தடுத்தல், பாரம்பரிய கூட்டு காணி உரிமைகளையும் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமைகளையும் மறுத்தல் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை கண்காணித்தலை தீவிரப்படுத்தல் ஆகியன அடங்கலாக இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மக்களை அவர்தம் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்கு மேலதிகமாக, தொல்லியல் அகழ்வாரய்ச்சிகள், வன விலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு எனும் போர்வையில் தற்போது நடைபெற்று வரும் காணிச் சூறையாடல்தான் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான ஆபத்தாகும்.

இலங்கை அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள், தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாகக் கொண்டு, ஐக்கிய பிரிபடாத இலங்கை யினுள் வாழ்ந்துவரும் ஒரு மக்கள் குழுமத்தினர் என்று உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எண்ணக்கருவை தோற்கடித்து அதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரு சிங்கள பெரும்பான்மையின பிரதேசங்களாக முனைப்புடன் மாற்றிய மைக்கும் எண்ணம் கொண்டவையாகும்.

46ஃ1 ஆம் இலக்க தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகள் தொடர்பாக அதன் செயலாற்றுகையை மதிப்பிடுமுகமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுகின்றபோது, மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான தனது கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென்பதையும் அந்த மீறல்கள் மீண்டும் நிகழாதிருப் பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரே உறுதியான வழியாக தமிழ் தேசியப் பிரச்சினையைக் கையாண்டு தீர்ப்பதற்கு அது எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைக்குமாறு உறுப்பு நாடுகளை நான் வலியுறுத்துகிறேன்.- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *