
இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் இன்று வெள்ளிக்கிழமை வடகிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன், பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்றைய தினம் மீனவர்கள் கடலில் கறுப்புகொடி போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வடமராட்சி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாகப் போராடி வந்த நிலையில் அவர்களின் போராட்டத்துக்கு நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
நாங்கள் சுதந்திரம் இல்லாத நாட்டிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 4 ஆம் திகதி (இன்று) உலகத்துக்கு எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையாக குருந்தூர்மலைக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரிநாளாக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.