
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சூழ்ச்சிகாரர்களின் வார்த்தைகளிற்கு சிக்காமல் நம்பிக்கையோடு எங்களுடன் கைகோருங்கள் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க பல போர்கள் நடைபெற்றன. பல யுத்தங்களின் பின்னர் 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறோம்.
சுதந்திரம் பெற்றாலும், தீவிர வாத செயல்கள் நம் நாட்டில் காணப்பட்டது. அவற்றில் இருந்து நம் நாட்டை மீண்டு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி.
இன்றய காலத்தில் இன மத பேதமின்றி அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று வர முடியும். வேண்டிய மத்தை பின்பற்ற முடியும். அவ்வளவு சுதந்திரம் நம் நாட்டில் காணப்படுகிறது.
அதேபோல நாட்டில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. மக்கள் தங்கள் கருத்தை முன் வைக்க முடியும்.
நாட்டின் தலைவர்களுக்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு மக்களிற்கும் பொறுப்புகள் உள்ளன. தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுபவர்கள் மட்டுமே நாட்டை கட்டி எழுப்ப முடியும்.
நாட்டின் தலைவர் என்ற முறையில் பல இன்னல்களை எதிர் கொள்ள வேண்டி வரும். அவை அனைத்தையும் எதிர்த்து நாட்டை வல்லரசாக்க வேண்டும்.
தற்போது உள்ள கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த நமக்கு தேவைப்படுவது தடுப்பூசி. அவற்றை சிறப்புற செய்து வருகின்றோம்.
நாட்டில் பொருளாதாரம் வணிகம் அனைத்தையும் கட்டியெழுப்ப நாட்டு மக்கள், வெளி நாட்டினரின் உதவி என்பன அவசியம். நாட்டில் விவசாயிகள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சூழ்ச்சிகாரர்களின் வார்த்தைகளிற்கு சிக்காமல் நம்பிக்கையோடு எங்களுடன் கைகோருங்கள்.- என்றார்.