
கொழும்பு, பெப் 4: கொரோனா பரவலுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்து வரும் தடுப்பூசி திட்டத்துக்கு உலக நாடுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பது:
சுதந்திரத்தை அடைய வரலாறு முழுவதும் இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான விடுதலைப் போராட்டங்கள் ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக, மத ரீதியாக, கலாசார ரீதியாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இன, மத, கட்சி பேதமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி மக்கள் இணைந்து ஒன்றுபட்டுப் போராடியதன் விளைவால் ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் நாம் சுதந்திரம் அடைந்தோம்.
போர்வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சல், அர்ப்பணிப்பால் 13 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் முடிவுக்கு வந்தது. இப்போது, உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.கொரோனா பரவலுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்து வரும் தடுப்பூசி திட்டத்துக்கு உலக நாடுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.