
ஹபரணை காப்புக்காட்டுக்கு நடுவிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் யானையை புகைப்படம் எடுத்த உக்ரைன் தம்பதியரின் காரை குறித்த யானை கடுமையாகத் தாக்கி பலத்த சேதப்படுத்தியுள்ளதாக மின்னேரியப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பதியினர் பொலன்னறுவையில் இருந்து ஹபரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானையை படம் எடுப்பதற்காக தேவாலயத்துக்கு அருகில் காரை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த காட்டு யானை அவர்கள் வந்த காரைத் தாக்கியது.
பின்னர், குறித்த வீதியில் பயணித்த டிப்பர் சாரதி ஒருவர், டிப்பர் வாகனத்தைப் பயன்படுத்தி யானையை காட்டுக்குள் துரத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
காரில் வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் எவ்வித காயங்களும் இன்றி அவர்கள் தங்கியிருந்த ஹபரணைப் பகுதியில் உள்ள விடுதிக்கு பாதுகாப்பாகச் சென்றுள்ளனர்.
தம்பதியினர் வந்ததாகக் கூறப்படும் கார் வாடகை வாகனம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் காரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வர மின்னேரியப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மின்னேரிய பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.சி ரத்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.