யாழில் மீனவர்கள் போராட்டம்- கச்சேரி, ஆளுநர் அலுவலகம் முற்றுகையால் முடக்கம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும், கடலில் உயிரிழந்த வத்திராயன் மீனவர்கள் இருவரின் சாவுக்கு நீதி கோரியும், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் நேற்று யாழ்.நகரில் மேற்கொண்ட போராட்டத்தால் யாழ்.மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் என்பவற்றின் நாளாந்தச் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. ஏ-9 வீதியையும் மீனவர்கள் வழிமறிப்புச் செய்தமையால் அந்த வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

நேற்றுக்காலை 7.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலம், ஆளுநர் அலுவலகம் என்பவற்றுக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மீனவர்கள் குறித்த இரு அலுவலகங்களினதும் வாசல்களை மறித்து முற்றுகைப் போரில் குதித்தனர். அத்தோடு யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் உள்ள இந்தியத் துணைத்தூதரின் வாசஸ்தலமும் மீனவர்களின் முற்றுகையில் சிக்கியது. இதன்போது, மாவட்டச் செயலகம், ஆளுநர் அலுவலகம் என்பவற்றில் பணிபுரிபவர்களையும் அந்த அலுவலகங்களுக்குள் செல்ல மீனவர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால் நீண்டநேரம் காத்திருந்த பின்னர் சகல அலுவலர்களும், அலுவலங்களில் பயன்பெற வந்திருந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, கச்சேரியை அண்மித்த ஏ-9 வீதியையும் வழிமறித்த மீனவர்கள் அதனூடான சகல போக்குவரத்துகளையும் துண்டித்தனர். எனவே மாற்றுப்பாதைகளூடாக மக்கள் பயணித்தனர். இந்த நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு வந்து, மீனவர்களுடன் உரையாடி, போராட்டத்தை முடிக்குமாறு வேண்டினார். ஆயினும் மீனவர்களில் ஒருசாரார் அதற்கு உடன்படாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் அங்கிருந்து வெளியேறினார். இதனையடுத்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மீனவர்கள் தங்கள் முற்றுகைப் போரை நிறுத்தி, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *