
நாட்டின் பல பாகங்களில் நேற்றும் எவ்வித முன்னறிவித்தலுமின்றி, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். நேற்றுப் பகல் வேளையில் இருந்தே யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், முல்லைத்தீவு , வவுனியா, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குறித்த சில மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது. இந்த மின் தடை குறித்து எவ்வித முன்னறிவித்தலும் விடப்படாமையால் பொதுமக்களும், தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் பெரும் இடையூறை எதிர்கொண்டனர்.
மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின் தடை ஏற்பட்டதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயினும் ’இந்த மின்வெட்டுக்கான அனுமதியை எம்மிடம் மின்சாரசபை கோரவில்லை. அவ்வாறு அனுமதியின்றி மின்வெட்டு நடவடிக்கையில் மின்சாரசபை ஈடுபட்டால் சட்டவிதிகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.