
திருகோணமலை_கிண்ணியா பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் உள்ள சிறுவர் பூங்கா அமைந்துள்ள காணியில் கடைக்கான கட்டடத் தொகுதியை அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்து இன்று (05) காலை 9.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இவ்ஆர்ப்பாட்டம் கொழும்பு கிண்ணியா பிரதான வீதியின் கச்சக்கொடித் தீவு பிரதேச சபைக்கு முன்னால் இடம் பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தை ஐந்து சங்கங்களும் பொது மக்களும் இணைந்து நடாத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உன் வருமானத்துக்காக எம் வருங்காலத்தை பாழாக்க நினைப்பது நியாயமா? , உன் சுய நலத்திற்காக சிறுவர்களின் உரிமைகளை பறிக்காதே, இடம் வேண்டும் இடம் வேண்டும் ஓய்வெடுக்க இடம் வேண்டும், அழிப்பதை நிறுத்தி விட்டு அபிவிருத்தியை முன்னெடு, முதலான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச் சிறுவர் பூங்காவில் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட இருபது கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் இங்கே தமது பொழுது போக்கினை கழித்து வருவதாகவும் வேறு ஒரு இடம் இல்லாததனால் இக் கட்டிடத்தை நிறுத்துமாறும் கூறுகின்றனர்.
இதே வேலை இக் கட்டடத்தை இங்கு நிர்மாணிப்பதை விட பிரதேச சபைக்கு சொந்தமான பல இடங்கள் இருக்கின்றன அங்கே நிர்மாணிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்
இக் கட்டிட நிர்மான வேலையினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கிண்ணியா பிரதேச செயலகம் 2022.01.31 ந் திகதி கச்சக்கொடித்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதே வேலை இவ் ஆர்ப்பாட்ட இடத்துக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வருகை தந்திருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்தினை கேட்டறிந்ததோடு அவர்களது மஹஜரையும் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இது சம்மந்தமாக கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கொந்தராத்துக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து அவ் விடத்தை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.நசீர் கூறுகையில்,
கடந்த காலங்களில் முன்னால் தவிசாளர்கள் இவ்விடத்தில் சிறுவர் பூங்கா இருந்த போதிலும் ஒரு பூ மரச் செடியேனும் நாட்டுவதற்கு முயற்சி செய்யவில்லை.
இவ் விடத்தில் சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
முன்னால் தவிசாளரும் குறிப்பிட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கைங்கரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சிறுவர் பூங்காவை அமைப்பதோடு கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய கடைத் தொகுதியினை அமைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறேன் .
சிறுவர் பூங்காவிற்கான அதே இடத்தில் பின் பக்கம் மிக சிறப்பான முறையில் அமையக்கூடிய வகையில் சிறுவர் பூங்காவை அமைப்பதாக தெரிவித்ததோடு சபைக்கு வருகின்ற வருமானத்தை தடுக்கும் நோக்கில் இவர்கள் செயலபட்டு வருகின்றனர்.
இவர்களது கேவளம் கெட்ட அரசியலை முறியடித்து எதிர்காலத்தில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் தன்னை வீழ்த்த செயற்படுவதில் குறித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் செயற்பட்டு வருகிறார் என்றார்.



