இரு நாட்டு உறவுகள் பாதிக்காத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்! – யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனம்

இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளைப் பாதிக்காத வகையில் இந்திய மீனவர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பான விவகாரம் தீர்க்கப்பட்டு, தமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்பினையும் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழிலாளர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் நாட்டின் ஏனைய பிரதேச கடற்றொழிலாளர்களுடன் ஒப்பிடுகின்ற போது பின்தங்கிய தொழில் முறைகளையே பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு கடற்றொழிலாளர்கள் தம்மை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏனைய பிரதேசத்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மூன்று கடற்றொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கான காப்புறுதிகளை வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும்.

கடற்றொழில் சார்பான சட்டங்கள் உருவாக்கப்படுகின்போது, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் சாதக பாதகங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லாத நிலையில் வடக்கு கடற்றொழிலாளர்கள் தேவையற்ற அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவை வடக்கு கடற்றொழிலாளர்கள் பூரண நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இந்திய இழுவைப் படகு விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக அணுகி விரைவில் தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அதற்கான தார்மீக ஆதரவினை தமக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! -மஹிந்தானந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *