
புதுடெல்லி, பெப் 6: இந்தியாவின் இசைக்குயில் என்றும், இசை அரசி என்றும் போற்றப்படும் அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.