இலங்கை கடற்படையின் தாக்குதலால் கடற்றொழிலை கைவிடும் நிலையில் தமிழக மீனவர்கள்!

கடற்பரப்பில் தொடரும் இலங்கை கடற்படையின் மோசமான செயலால் தொழிலை கைவிடும் நிலையில் உள்ளோம் என தமிழக கரையோர மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம், இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்து கொடுத்த பின்னர் தமிழக கரையோர மீனவர்கள் தொழில் செய்யும் கடற்பரப்பு குறைக்கப்பட்டது. அதிலிருந்து இலங்கை இந்திய அத்துமீறல் பிரச்சினை இன்னமும் மோசமானது.

25 ஆயிரம் நாட்டுப் படகு மற்றும் 4 ஆயிரம் விசை படகை வைத்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் பகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் காற்று, நீரோட்டம், பாதை மாற்றம் காரணமாக தவறுதலாக இலங்கை கடலுக்குள் நாம் செல்கின்றோம். வேண்டும் என்று நாம் எல்லை தாண்டுவது இல்லை. இதனால் வருடம் ஒன்றுக்கு 200 படகுகளை இழக்கின்றோம். இதனால் நாம் கடற்தொழிலையே கைவிட வேண்டிய நிலையில் உள்ளோம்.

அத்துடன் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால், இலங்கை கடல் படையின் மோசமான தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டால் பல சொந்தங்களை இளந்துள்ளோம். இதற்கு இலங்கை இந்திய அரசு தீர்வு காண வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக நாம் பலர் கடலுக்கு செல்லவில்லை. எம்மை பார்த்தாலே கடல் படை கல்லால் ஏறிகிறது. போத்தல்களால் தாக்குகின்றனர். கடலில் கால் வைக்கவே பயமாக உள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 1,000 பேரை இலங்கை கடற்படைக்கு இரையாக கொடுத்து விட்டோம். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகின்றோம் என்பதை மறக்க கூடாது.- என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *