கூட்டு ஆவணத்தில் இருந்து விலகியமைக்கு தமிழரசு கட்சிதான் காரணம்! – மனோ குற்றச்சாட்டு

தமிழ் பேசும் கட்சிகளாக ஒன்றிணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பிய கூட்டு ஆவண முயற்சியில் இருந்து வெளியேறியமைக்கு தமிழரசுக் கட்சிதான் காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தனியார் வானொலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் ஆவணமாக கருதியே, அது தொடர்பான கலந்துரையாடல்களில் தாம் பங்கேற்றிருந்தோம்.

இலங்கை அரசமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தச் சட்டத்தை கூட இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என்பதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்தபோது உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்கள்.

இவ்வாறு ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போது சர்வதேச சமூகம், யுத்தம் முடிவுக்கு வரட்டும் அல்லது புலிகள் முடிவுக்கு வரட்டும் அதற்கு பின்னர் நியாயத்தை வழங்குவோம் என தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தன.

அதற்கமைய ராஜபக்சவும் 13 என்றும் 13 பிளஸ் என்று சொன்னார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த அரசாங்கம் இன்று தமிழ் மக்களை மட்டுமல்ல உலக நாடுகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த விடயத்தை அம்பலப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை சந்திக்கு இழுக்க வேண்டும் என்றுதான் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசு கட்சி உள்ளே வந்து ஆரம்ப நோக்கங்களை புரிந்து கொள்ளாது, இராஜதந்திர அணுகுமுறைகளை விளங்கிக்கொள்ளாது தலையீடு செய்தமையே நாம் வெளியேற வேண்டிய சூழலை ஏற்படுத்தியது.

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சார்பான ஆவணமாகத்தான் ஆரம்பத்தில் கருதப்பட்டது. அப்படி உணர்ந்துதான் நானும் நண்பர் ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தோம்.

ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும், முஸ்லீம்களும் என மூன்று தரப்பும் ஒன்றாக தமிழ் பேசும் தரப்பாக ஒன்றிணைந்தமை முக்கியமானதாகும். சமகாலத்தில் ஏற்பட்ட முக்கிய விடயமாக இது அமைந்திருந்தது. இதனை தமிழரசுக் கட்சியினர் உணர்ந்துகொள்ள மறந்துவிட்டார்கள்.

13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தும் ஆவணம் ஒன்றரை பக்கமாக தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சி வந்த பின் அதன் நோக்கத்தை மாற்றி வடக்கு கிழக்கில் வாழக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு உரித்தான விடயமாக மாற்றியிருந்தார்கள்.

இந்த பின்னணியில்தான் அந்த முயற்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டியிருந்தது என அவர் தெரிவித்திருந்தார்.

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *