
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந் தவறிழைத்து விட்டார் என்று இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை மையப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண் நகையாக உள்ளது.
இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.
அவ்விதமான விடயத்தை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.