
எமது ஆட்சியில் நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதுடன், அதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசுமைத் திட்டத்தின் கீழ், யால தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு நலன்புரி அலுவலகத்தின் பயன்பாட்டுக்காக நீர் சுத்திகரிப்பு வடிகட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதிகாரம் இல்லாவிட்டாலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் எதிர்க்கட்சியாக நாம் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
பலர் குறுகிய கால சலுகைகளை வழங்குவதற்கே செயற்படுகின்றனர். அடுத்த தலைமுறையினரைப் பாதுகாத்து முழு மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு.
அதிகாரம் இல்லாமல் எவ்வாறு செயற்படுவது என்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிடம் நடைமுறை ரீதியான எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன.
நாட்டின் அபிமானத்தை மேலோங்கச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி இருமுறை யோசிப்பதில்லை.
நமது நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினை காணப்படுகின்றது. இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு அந்நிய செலாவணியின் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.