
பழம்பெரும் திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றுக் காலமானார்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவர் லதா மங்கேஷ்கர் 13 வயதில் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1942-ஆம் ஆண்டில் முதல் பாடலைப் பதிவு செய்தார். பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் வளையோசை உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.
1969-ஆம் ஆண்டில் பத்ம பூஷண், 1999-ஆம் ஆண்டில் பத்ம விபூஷண், 2001-ஆம் ஆண்டில் பாரத் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார்.
இரு நாள்கள் துக்கதினம்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இந்தியா முழுவதும் இரு நாள்கள் தேசிய துக்கதினமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் நாடு முழுவதும் பறக்கவிடப்படவுள்ளது.
இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லதா மங்கேஷ்கர் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நேற்றுமாலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.