
கொழும்பு, பெப் 6: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக இந்தியா மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: அமைதியில் ஓய்வெடுங்கள் ஸ்ரீமதி லதாமங்கேஷ்கர். தனது பொன்னான, இணையற்ற குரல் மூலம் பில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்ட இந்தியாவின் இசை ராணி நீங்கள். நீங்கள் ஒரு சகாப்தம். உங்களது இனிமையான குரல் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு எம் மத்தியில் நீங்கள் வாழ்வீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் ஆன்மா சாந்தியடையட்டும் பல தசாப்தங்களாக எல்லைகளைத் தாண்டி ‘இசை ஒரு உலகளாவிய மொழி’ என்ற சொற்றொடருக்கு உயிர் கொடுத்ததற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் ‘லதா மங்கேஷ்கர் தனது மயக்கும் குரலால் கலாச்சாரங்களை இணைத்துப் பாலம் கட்டினார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.