
தென்னாசிய நாடுகளிடம் கையேந்தி கடன் பெறக்கூடிய நிலைமைக்கு தற்போது இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் இலங்கை 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நாட்டில் பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் சிரேஷ்ட நிதி அமைச்சர்கள் பலர் காணப்பட்டனர். அவர்களால் பொருளாதாரம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டது.
ஆனால் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் நிதி அமைச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார சீரழிவு ஆரம்பமாகிவிட்டது.
2010 இல் 21 பில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டுக் கடன், 2015 ஆம் ஆண்டாகும் போது 42 பில்லியன் டொலராக அதிகரித்தது. 5 ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ 21 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே அதிக கடன் பெறப்பட்டுள்ளது.
எனவே அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சியமைக்கும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு நீதி வழங்காமை, உரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவே ராஜபக்ஷ அரசாங்கம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவதற்கான பிரதான காரணியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி இனி தனித்தே தேர்தலில் போட்டியிடும்! லக்ஷ்மன் தெரிவிப்பு