
முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு நேற்றிரவு (05) இரண்டு அமைச்சர்களுடன் நாற்பதற்கும் மேற்பட்ட பிக்குமார்கள் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் அகழ்வு இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு நேற்றிரவு, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி. பி ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
சுதந்திரத்தின நாளான கடந்த 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் , சிவஞானம் ஸ்ரீதரன் , இரா .சாணக்கியன் உள்ளிட்டோர் சுதந்திர தின நாளுக்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாக தமிழ் மக்களின் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டுவரும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்திருந்தனர்.
அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் அதற்கு மறுநாளான நேற்று (05 ) குறித்த அமைச்சர்களின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, ஹெப்பத்திகொல்லாவ, மணலாறு , அரிசிமலை பகுதிகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் 40 பேருக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அமைச்சர்களோடு குருந்தூர் மலையில் நேற்றிரவு 07 மணி தொடக்கம் நள்ளிரவுவரை பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகலில் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள கோட்டபாய கடற்படை முகாமில் இரவு தங்கிய இரண்டு அமைச்சர்களும் இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.




