க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலைமை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பல்வேறு சந்தர்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறவுள்ளது.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்காக 2 ஆயிரத்து 437 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலை ரீதியான பரீட்சார்திகளும், 66 ஆயிரத்து 101 தனியார் பரீட்சார்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்திகள், பரீட்சை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொறுப்பதிகாரிக்கு கட்டாயம் அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பரீட்சார்திகள் மாவட்ட வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்திலும்,

மாவட்ட பரீட்சை மத்திய நிலையத்திலும், அல்லது தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையத்திலும் பரீட்சைக்குத் தோற்ற முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *