
கொழும்பு, பெப் 7: சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை காலை 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் நடத்திவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சுகாதார நிபுணத்துவ சேவைகளை மூடிய சேவைகளாக மாற்றுதல், விசேட கடமை கொடுப்பனவை ரூ.10,000 ஆல் அதிகரித்தல், அனைத்து சுகாதார நிபுணர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘சுகாதார நிர்வாக சேவை’யை நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.