
பல வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டவரை மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
இதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக் காலங்களில் பல வீடுகள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் சந்தேகத்தில் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்தவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது அவரை இன்று (7) திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் பொலிஸ் குழு குறித்த சந்தேக நபரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.