
கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைச்சு பின்னர் ஊடக அறிக்கையை நிராகரித்தது. ஆனால் நிதியமைச்சரால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை எவரும் பயன்படுத்துவதற்கு எமது சட்டங்களில் இடமில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தால் தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாட்டைக் கையாள்வதற்கான ஆணையை பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.