
உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது. அது நாட்டில் செயல்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியிருக்கிறார்.
அத்துடன், சர்வதேசம் தலையீடு செய்தால் அது உண்மையான நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், காயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுக்காக அரசாங்கம் எவ்வாறு தயாராகிறது. எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
பயங்கரவாத மோதலின் இறுதியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், முக்கியமான விவகாரங்களுக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். காயங்களை எவ்வாறு ஆற்றலாம் ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.
உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது. அது செயல்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு. சர்வதேச தரப்பு தலையிடுவதற்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு நாங்கள் இவற்றை பயன்படுத்தவேண்டும்.
சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், காயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.
ஆகவே, நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். மேலும், முன்னேறுவோம் என்பதே எங்களின் நிலைப்பாடு. நாங்கள் உண்மையை தெரிவிப்போம்.
வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, உலகுக்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரவுள்ளோம். நாங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தால் அதனை செய்ய முடியவில்லை. – என்றார்.