
புத்தளம் மாவட்டத்தில் எல்லைகள் நிர்ணயம் செய்வது மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை பிரிப்பது சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (06) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜௌசி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்பட உலமாக்கள், பெரிய பள்ளி நிர்வாக சபையினர், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, எல்லைகள் நிர்ணயம் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை பிரிப்பது உள்ளிட்ட விடயங்களில் கலந்துகொண்ட உலமாக்கள் உள்ளிட்டோர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இறுதியில் இந்த விடயங்கள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மேற்பார்வையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழுவுக்கு திட்ட வரைவுகள் உள்ளிட்ட விடயங்களும் பணிகளக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது