
டெல்லி, பெப் 7: இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாகப் பேசினார்.
இதன்போது, மீனவர் பிரச்சினை உள்பட இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, டெல்லியில் உள்ள இலங்கை தூதரக மூத்த அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தியத் தரப்பில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.