
கொழும்பு, பெப் 7: மின்வெட்டுதொடர்பாக இலங்கை மின்சார சபை இதுவரை எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை. எனவே, இன்றும், நாளையும் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக PUCSL இன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில் “‘தற்போதுள்ள மின் கொள்ளளவைக் கொண்டு திங்கள்கிழமைக்கு தேவையான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும், எனவே மின்வெட்டை அமல்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை.
நாட்டு மக்கள் தமது மின்சார பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றும், நாளையும் மின்வெட்டு இருக்காது. ஜி.சி.இ. உயர்தரப் பரீட்சை நடந்து வரும் நிலையில், மின்வெட்டு அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகுவார்கள்.
தற்போது மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் கிடைக்கிறது. எதிர்காலத்தில் அதிக எரிபொருள் கிடைக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.