
கடந்த சில தினங்களில் கொரோனா தடுப்பு செயலூக்கியைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளாந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியினை பெறுவதற்காகத் தடுப்பூசி மையங்களுக்கு பிரவேசிக்கின்றனர். இது ஒரு சிறந்த விடயமாகும். அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வது அவசியமாகும்.
நாட்டில் நேற்றைய நாளில் 39, 772 பேருக்கு, பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,777,838 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் 1,156 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,411 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
408 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 537 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.