கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் வெளியிட்ட தகவல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக 500 பக்தர்கள் மாத்திரம் செல்ல முடியும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியப் பக்தர்களின் வருகை தொடர்பிலும் கவனம் செலுத்தவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இந்த அதிகரிப்பு ஆரோக்கியமானதாக இல்லை.

தற்பொழுது அனைத்துச் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து, கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றின் நிலை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

ஆகவே, சுகாதார அமைச்சினால் இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக பொது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும்.

மேலும் ஒன்றுகூடல்களை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும். தேவையற்ற பயணங்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 62 வீதத்திற்கு மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியையும் அதற்கு குறைவானவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்கள் சற்றுக் குறைவாக இருந்தபோதும் தற்பொழுது மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்று வருவது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்வது சுகாதார பகுதியினரினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே பொது மக்கள் வீண் வதந்திகளை நம்பாது தடுப்பூசிகளை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டெங்கு காய்ச்சலும் அதிகமாக காணப்படுகின்றது. புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது.

எனவே, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராம உத்தியோகத்தர்கள் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். – என்றார்.

சாதாரண தரப் பரீட்சை குறித்து வெளியான தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *