இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைமடி தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்! டக்ளஸ்

தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவினைப் பலப்படுத்த விரும்புகின்ற அதேவேளை, இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று நடத்திய காணொளி மூலமான கலந்துரையாடலிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், தொப்புள் கொடி உறவுகளான தங்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மாற்று தொழில் முறையில் ஈடுபடும் வரைக்குமான கால அவகாசத்தினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்கின்ற செயற்பாடுகளையும் மீள் பரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

பண்பாட்டு கலாசார ரீதியாகவும் பல்வேறு தேவைகள் காரணமாகவும் தமிழக உறவுகளுடனான தொப்புள் கொடி உறவு வலுப்படுத்த வேண்டும் என்பதை உளமார தான் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக இலங்கையின் கடல் வளம் அழிந்து போவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பயன்படுத்த முடியாதவை என்ற அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கைவிடப்பட்ட மீன்பிடிப் படகுகளே ஏலமிடப்பட்டது.

மேலும், பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு சுமூகமான தீர்வினை காண்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வினை எட்டுவது ஒருபுறமிருக்க, இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபடுவதை இந்தியக் கடற்றொழிலாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய காணொளி மூலமான கலந்துரயாடலில், நாகைப்பட்டினம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *