
கொழும்பு, பெப் 9: இலங்கையில் ஜேர்மனிய பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 28 வயதான வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் “‘பாதிக்கப்பட்ட 32 வயதான பெண்ணின் தந்தை இலங்கையர். தாய் ஜேர்மன் பிரஜை.
இந்தப் பெண்ணுக்கும், சந்தேக நபரான 28 வயதான வர்த்தகருக்கும் இடையில் சுமார் 6 ஆண்டுகள் நட்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் திகதி இலங்கை வந்த குறித்த பெண், தங்காலையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இல்லத்தில் தங்கியிருந்து இலங்கையில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபரான வர்த்தகருடன் கண்டிக்கு சென்ற அவர் அங்கு 2 வாரங்கள் விடுதியொன்றில் தங்கியுள்ளார்.இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி அப்பெண் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தமையினால் குறித்த வர்த்தகருடன் கடந்த 4ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு வந்து அன்றிரவு, இரவு நேர களியாட்ட விடுதியொன்றுக்கும் சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை 4 மணிவரை இருவரும் மது அருந்தியுள்ளனர். இதன்போது, குறித்த பெண்ணின் ஏடிஎம் அட்டை காணாமல் போனதுடன், அதனைப் பற்றி வர்த்தகர் அக்கறைக் கொள்ளாததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், குறித்த பெண் மாத்திரம் முச்சக்கர வண்டியில் கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார். பிறகு, சந்தேகநபர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்மை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அந்த பெண் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை கைதுசெய்துள்ள கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.