
நாட்டில் பால்மாவை பயன்படுத்துவது ஒரு போதையாக மாறிவிட்டது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பால்மாவில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்குத் தெரியுமா?.
பால்மாவிலுள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்தால் பால்மா பொதிகளை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் குறையும்.
பொதுமக்களுக்கு திரவப் பாலில் பல தெரிவுகள் உள்ளன. சவால்கள் மற்றும் பிரச்சினைகள் எவையாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதில் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்துவார்.
இவ்வாறான தீர்மானங்களை மக்கள் விரும்பமாட்டார்கள். தற்காலிகமாக அவை பிரபலமடையாது. இவ்வாறான தீர்மானங்களின் பின்னணியில் உள்ள காரணங்களை எதிர்காலத்தில் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.
பல மாற்று வழிகள் இருக்கும் போது, பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மக்கள் வரிசையில் நிற்பது குறித்து ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.