
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான நிலப்பரப்புகளை வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் துவாரகாதேவி ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது பிரசத்தின் வருமான ஈட்டல் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சங்கானை பேருந்து நிலையத்தில் சபைக்கு சொந்தமான காணியிலுள்ள ஆலயத்தை மையப்படுத்தி பலர் உரிமைகோருவதும் பிரச்சினைகளில் ஈடுபடுவதுமான நிலை காணப்படுகின்றது. ஆனால் அந்த நிலப்பரப்பு பிரதேச சபைக்குரிய சொத்தாகும்.
இந்நிலையில் சிறிய ஒரு ஆலயமாக இருந்த குறித்த ஆலயம் தற்போது பெருப்பிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது. இதனால் சபைக்குரிய காணி மேலும் கையகப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
இந்த பிரச்சினையை சமய நிந்தனையோ அன்றி சமயத்திற்கு எதிரான செயற்பாடாகவோ பார்க்கக் கூடாது. அந்த ஆலயத்தின் பொறுப்பை சபை ஏற்று நடத்த வேண்டும். அக்காணியில் மேலும் பல கடைத் தொகுதிகளை அல்லது அங்காடிகளை அமைத்து சபைக்கு வருமானம் ஈட்டும் வழிவகைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குறித்த ஆலையத்தை பலர் சமூகவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும் சில சமயங்களில் மதுபானம் அருந்தும் இடமாக இருப்பதாகவும் பொது அமைப்புகளும் சமயம் சார்ந்த நலன்விரும்பிகளும் சுட்டிக்காட்டியுள்ளதாக சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் குறித்த ஆலயத்தை அகற்றுமாறு குறிப்பாக இந்து ஆலயத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் அதை நிறுத்துமாறு வலியுறுத்தியும் அதை கட்டுப்படுத்த முடியாமையால் சமய சந்நிதானத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாத என்றும் சுட்டிக்காட்டி பல இந்து அமைப்புகள் மற்றும் பொதுநலன் விரும்பிகள் பல கடிதங்களை சபைக்கு அனுப்பியதன் அடிப்படையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் அதை அகற்ற தீர்மானித்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த ஆலயம் போராட்டகாலத்தில் பலியான புலிகளின் நினைவாக நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டதாக சபையின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியதுடன் அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோதும் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
குறித்த ஆலயம் சபையின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளபோதும் அதை மேலும் சட்டவிரோதமாக விஸ்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென உறுப்பினர்கள் சட்டிக்காட்டியிருந்ததுடன், இனிவரும் காலத்தில் அதை பிரதேச சபை பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
இதேநேரம் வருமானங்களை சபை பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் அல்லது அவ் ஆலயத்தை பிரதிஸ்டை செய்து பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் அந்நிலப்பரப்பில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு வழிவகை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தொல்புரம் பத்தானைக்கேணி பகுதியில் உள்ள சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் சுழிபுரம் உப அலுவலகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ தொகுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணன் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
குறித்த யோசனையை ஏகமனதாக ஏற்ற சபை உறுப்பினர்கன் தற்போது உள்ள வழக்கம்பரை உப அலுவலக காணியில் பெற்றோல் நிரப்பு நிலையம் அல்லது நவீனத்துவத்துடன் கூடிய சிறுவர் முற்றம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இதனூடாக கிராமப்புறத்தையும் அவிருத்தி செய்யும் திட்டத்தை இலகுபடுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.