
நல்லூர் பிரதேச சபையில் வறுமைக்கோட்டிற்;கு உட்பட்ட மக்களுக்காக எட்டு விகிதத்தில் காணப்பட்ட சோலை வரியானது இரண்டு விதமாக குறைக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லூர் பிரதேச சபை மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சபைக்கூட்டத்தில் முதலாவது எடுக்கப்பட்ட தீர்மானமாக நல்லூர் பிரதேச சபையில் வறுமைக்கோட்டிற்க்கு உட்பட்ட மக்களுக்காக எட்டு விகிதத்தில் காணப்பட்ட சோலை வரியானது இரண்டு விதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வீதம் குறைவானது மக்களுக்கான இருப்பை தக்க வைப்பதற்கும் அவர்களுக்கான உறுதிப்படுத்தலையும் மேற்கொள்வதற்குதான் நாங்கள் இந்த இரண்டு விகித சோலை வரி குறைப்பு மேற்கொண்டிருந்தோம்.
குறிப்பாக இந்த சூழ்நிலையை முற்றுமுழுதாக குறைப்பதாக தீர்மானித்திருந்தோம். ஆனால் அவர்களுடைய இருப்பிடத்தை உறுதி செய்து கொள்வதற்காகவே இரண்டு விகித்தத்தை பேணி கொள்ளுகின்றோம்.
நல்லூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீதியோர துப்புரவு பணிகள் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வாய்க்கால் துப்புரவு பணிகள் இடம்பெறுகின்றது.
போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகின்ற மேலும் அனுமதியின்றி வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற விளம்பர பலகைகள் அகற்றுகின்ற செயற்பாடுகளும் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நல்லூர் பிரதேசசபை முன்னெடுக்கப்படுகின்ற ஒரு செயற்பாடாக ஆடியபாதம் வீதி இருபுறமும் அழகுபடுத்துகின்ற திட்டத்திற்கு அமைவாக தற்சமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு முன்னால் நடைபாதை அமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாம் கட்டமாக கொக்குவில் இந்துக்கல்லூரி உடன் இணைக்கும் செயற்றிட்டம், மூன்றாம் கட்டமாக திருநெல்வேலி சந்திப் பகுதியை அழகுபடுத்தும் செயற்திட்டமாகவும் நான்காம் கட்டமாக செம்மணி வளைவு அழகுபடுத்தல் செயறிட்டதையும் தொடர்ந்து அதனுடாக நடைபாதைகளை அமைப்பதற்கு நல்லூர் பிரதேசசபை தீர்மானித்திருக்கிறது.
இதற்கு ஒவ்வொரு மக்களுடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவைப்படுகின்றது. குறிப்பாக மக்களினுடைய சோலைவரி பணத்திலேயே நாங்கள் செயல் திட்டங்களையும் மேற்கொள்கின்றோம். அதற்கமைவாக எங்களுடைய ஊழியர்களும் கொவிட் தொற்று காலத்தில் கூட தங்களுடைய அர்ப்பணிப்பான சேவைகளை இன்றுவரை வழங்கி வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் திண்மக் கழிவுகளை நாங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அகற்றினோம். தற்சமயம் வாரத்தில் ஆறு நாட்கள் கூட திண்மக் கழிவுகளை அகற்ற முன் வந்திருக்கின்றோம்.
அதற்கமைய பொது மக்கள் விழிப்புணர்வோடு குறித்த திண்மக் கழிவுகளை தரம் பிரித்து கொடுக்க முன்வரவேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
நல்லூர் பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்படுள்ளது. 0212222701 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய முறைப்பாடுகளையும், அத்தியாவசிய அடிப்படை தேவைகளையும் அதன் ஊடாக நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்