இலங்கைக்குப் பெருமையைத் தேடித்தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி கௌரவிக்கும் நிகழ்வு, திருகோணமலையில் இடம்பெற்றது.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித்தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) இடம்பெற்றது.
இதன்போது அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் உட்பட சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கணேஷ் இந்துகாதேவி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது இலங்கை பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

