
கர்நாடகாவில் ஒரு வாரத்துக்கு பின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து கடந்த திங்கள் அன்று 9 மற்றும் 10ம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து பாடசாலைகள்இ கல்லூரிகளும் திறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள தெரிவித்துள்ளன.
தும்கூர், விஜயபுரா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் வருகை தந்ததுள்ளனா்.
பாடசாலை, கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியும் ஹிஜாபை அகற்ற மறுத்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயபுராவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்று அமர்ந்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் பல இடங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை.
போராட்டங்களை தடுக்க கர்நாடகாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.