
கொழும்பு, பெப்.18:
இலங்கை அரச கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இலங்கை அரசியலில் முத்தரப்புக் கூட்டணியின் உருவாக்கத்தை விரைவில் காணமுடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் ” அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாநாட்டில் அரச பங்காளிக் கட்சிகள் பங்கேற்காமையானது, பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிவழி செல்லக்கூடும் எனவும், ஏனைய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கலாம் எனத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதனடிப்படையில், அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளைத் தயாரித்து எதிர்வரும் 2ஆம் திகதி அரசி டம் கையளிக்க இந்த அணியினர் தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக மற்றுமொரு சந்திப்பை அமைச்சர் விமல் வீரவன்ஸ அல்லது உதய கம்மன்பில ஆகியோரின் வீட் டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.