பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் தாம் நியாயமான சேவைகளையே மேற்கொண்டு வருவதாக வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சங்கம் தெரிவிப்பு

கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் தாம் கட்டணத்தை அதிகரிக்காது நியாயமான சேவைகளையே மேற்கொண்டு வருவதாக வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமது வடமாகாண சிகை அலங்கார சங்கங்களின் சம்மேளன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட மற்றும் பிரதேச சங்கங்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், எமது தொழிலை அடையாளப்படுத்தும் வகையிலானதும் எமது தொழிற்சங்கத்தை சுட்டி நிற்கும் வகையிலான இலட்சினை மற்றும் பெயர் என்பனவற்றை உள்ளடக்கியதாக வடமாகாணத்துக்குள்ளே ஒரு சில அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.

இருப்பினும், வடமாகாணத்திலே சம்மேளனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஐந்து மாவட்ட சங்கங்களிற்கோ அல்லது அதன் கிளைச்சங்கங்களிறகோ எந்த விதமான ஒரு தொடர்பும் கிடையாது என்பதை தெரியப்படுத்துகிறோம்.

இவ்வாறான போலி அமைப்புக்களிடம் எமது தொழிலாளர் சார்ந்த உதவிகளை யாரும் வழங்க வேண்டாம் என்று தயவுடன் வேண்டிக் கொள்வதோடு, இதனால் ஏற்படும் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் எமது தொழிலாளர் சார்பான தொழிற்சங்கமாகிய நாங்கள் பொறுப்பல்ல என்பதையும் அறியத் தருகின்றோம்.

இதுவரை காலமும் எமது தொழிலாளர் சார்ந்த அங்கத்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார உதவி, கல்விசார் உதவிகள், மரண கொடுப்பனவுகள், நோய்வாய்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் என்பவற்றை எமது தொழிற்சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உதவி, தனவந்தர்களின் உதவி, புலம்பெயர்வாழ் அன்பு உறவுகளின் உதவிகள் ஆகியவற்றின் ஊடாக இன்று வரை மனிதாபிமான பணிகளாக செய்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் எமது அங்கத்தவர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பத்தினர்களுக்கும் உதவித் திட்டங்களை வழங்க வடமாகாணத்திலே, நேரடி கண்காணிப்பின் கீழ் ஐந்து மாவட்ட மற்றும் கிளை சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக வடமாகாண சிகை அலங்கார உறவுகளின் ஆதரவுக் கரங்கள் எனும் திட்டத்தின் கீழ் எமது அங்கத்தவர்கள், தனவந்தர்கள், அரச அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், புலம் பெயர் வாழ் எமது அன்பு உறவுகள் ஆகியோரின் உதவிகளை பெற்று திட்டத்தினையும் இன்று முதல் முன்னெடுக்க உள்ளோம்.

அண்மைய இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று நோய் காரணமாக தொழிற்சங்க செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த சிறு தொய்வு நிலைகள் அனைத்தும் ஐந்து மாவட்டங்களிலேயும் மிக விரைவாக கட்டம் கட்டமாக சீர் செய்யப்படவுள்ளது.

எமது அங்கத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவதன் ஊடாக மட்டுமே தொடர்ச்சியாக எமது தொழிற்சங்கமானது வெற்றிப் பாதையில் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியும். – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *