வடக்கை அச்சுறுத்தும் மலேரியா: யாழில் நால்வர் அடையாளம்!

வடக்கு மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார். இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஏனைய மாவட்டங்களில் இந்த நோய் பரவும் அனர்த்த நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2 நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்தனர். இதன் பின்னர் இரண்டு வாரங்களில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர். 4 வார காலத்திற்குள் யாழ்ப்பாணத்தில் 4 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கை ஒரு சிறிய நாடு இவ்வாறான நாட்டில் ஒரு பிரதேசத்தில் நோய் அனர்த்த நிலை இருக்கின்றது என்பது அது நாட்டிற்கே அனர்த்த நிலையாகும். இதுதொடர்பில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அதாவது ஒரு பகுதியில் மாத்திரம் இந்த அனர்த்தம் இருப்பதாக கருத முடியாது.

இந்த அனர்த்த நிலையில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்பதற்காக மலேரியா ஒழிப்பு குழு, சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த மாகாணத்தின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இந்த வருடத்தில் இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6. இவர்கள் அனைவரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்த நோயாளர்கள். இவர்களை நாம் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் வைத்து சிகிசையளித்து மீட்டெடுத்துள்ளோம்.

6 ஆவது நோயாளர் அனுராதபுரத்தில் ஹபரண பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் தான் இவர் காணப்பட்டார். இவர் எந்தவொரு நோய் அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை. இதேபோன்று எமது வைத்திய குழு இவரை அடையாளம் கண்டது பாரிய வெற்றியாகும்.

இவற்றை நாம் கவனத்தில் கொள்ளாது இருந்தால் மலேரியா நோய் தொற்றிய ஒருவர் மூலம் 1,000 நோயாளர்கள் உருவாதற்கு ஆரம்பமாக அமையும். சுகாதார ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்புகளுக்கு இடையிலேயே இந்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *