
வடக்கில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர் அனுபவித்த துன்பம் வேதனையை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு வருகை தந்திருக்கும் ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டி அணிந்து வந்திருக்கிறார்கள் இது ஒரு ஜனநாயகத்தின் வெளிப்பாடு.
நாம் ஒரே குடையின் கீழ் வாழ்கின்ற நிலையில் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம்.
ஆனாலும் நாட்டில் வாழுகின்ற தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் உரிமைகள் இந்த நாட்டிலே உறுதி செய்யப்பட வேண்டும்.
ஈராக் மீது அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா போர் தொடுத்ததை எல்லோரும் அறிவீர்கள்.
அங்கு என்ன இடம்பெற்றது ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா சந்தேக செய்தியை வெளியிட்டு அதை உண்மையாக்கும் விதமாக போர் தொடுத்தது.
ஊடகம் ஜனநாயகத்தின் தூணாக கருதப்படுகின்ற நிலையில் தகவல்களை உறுதி செய்து வழங்க வேண்டும்.
ஆகவே வடக்கு ஊடகவியலாளர்களை தொழில்நுட்ப ரீதியாகவும் வாழ்வாதார நீதியாகவும் முன்னேற்றுவதற்கு என்னால் இயன்ற பங்களிப்பை செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வகுத்தன உணவுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.