
சென்னை, பெப்.19
முதல்வர் ஸ்டாலினின் சுய சரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 28ம் திகதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சமூக நீதி கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
புத்தக விழாவில் பங்கேற்கும் தலைவர்களுடன் தேசிய அளவிலான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.