ஏவுகணையை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷ்யா

மாஸ்கோ, பெப்.20

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷ்யா மறுத்துள்ளது.

எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. போர் பயிற்சி இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது.

ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷ்யா கூறி உள்ளது.   இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *