வீட்டுக்குள் விச வாயு: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

கேரளா, பெப்.21

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது சம்பவம் தொடர்பில் கேரள பொலிஸ் அதிகாரி கூறியதாவது,

கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40) என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34) இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுகிகிழமை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப்பின் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் எமக்கு தகவல் வழங்கினார்.

உடனே விரைந்து வந்து நாங்கள் கதவை உடைத்து பார்த்தோம். அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியேறியது. வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை உணர்ந்த முதற்கட்டமாக அதனை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினோம்.

தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தோம்.

அங்கு ஒரே அறையில் ஆஷிப் உட்பட 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். பின்னர் 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி 4 பேர் தற்கொலை செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *