
கல்முனை, பெப்.21
பயங்கரவாத தடைச் சட்டமானது ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும். மனித குலத்திற்கு தேவையற்றதுமாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு கூறியதாவது,
இந்த கையெழுத்து போராட்டமானது இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்வதற்காகவே ஆகும்.1979 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையில் உருவாக்கப்பட்டது. அது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மனித உரிமை சட்டயத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிரான சட்டமாகும். மனித குலத்திற்கு தேவையற்றதாகும். இயற்கை நீதி விதி கோட்பாட்டிற்கு எதிரான ஒரு சட்டம். இந்த சட்டத்தின் ஊடாக ஒருவர் கைது செய்யப்பட்டால் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எந்த வாய்ப்பும் அவருக்கு கிடையாது என குறிப்பிட்டார்.