
கொழும்பு, பெப்.23
எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை அரசாங்கம் சந்திக்கவுள்ளது.
மார்ச் மாதம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, அமைச்சர் உதய கம்மன்பில புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – யுக்ரைன் பதட்டத்தின் மத்தியில், எண்ணெய் விலை 115 டொலர்கள் வரையில் அதிகரிக்க இருப்பதாகவும், தற்போது டொலர் தட்டுப்பாட்டில் உள்ள இலங்கை இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் வழங்கிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தற்போதைய சூழ்நிலையில் எரிபொருளை நாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். மார்ச் மாதம் நடுப்பகுதி அளவில் எண்ணெய் விலை 100 டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போதே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது.
எவ்வாறாயினும் இதுவரையில் இலங்கைக்குப் பிரவேசித்த எண்ணெய்க் கப்பல்கள் எவையும் திருப்பியனுப்பப்படவில்லை. வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் எண்ணெய் கப்பல்களை நாட்டுக்கு வரவழைக்க மட்டுமே முடியும். அவற்றிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான டொலரை அரசாங்கமே வழங்க வேண்டும்.
அதேநேரம் மார்ச் மாதம், எரிபொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து, நீண்டகால கடன் வசதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகக் கலந்துரையாடவிருப்பதாக, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.