தமிழக உரிமைகளை பாதுகாக்க ஸ்டாலினின் முயற்சிக்கு தேர்தல் மூலம் மக்கள் பேராதரவு: வைகோ

சென்னை, பெப்.23

தமிழகத்திற்கான உரிமைகளை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் பேராதரவு அளித்துள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழக மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

தமிழகத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலை பெறவும் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் தமிழக மக்கள் அளித்துள்ள பேராதரவு பறைசாற்றப்பட்டு இருக்கிறது.

தமிழ், தமிழர், தமிழகத்தின் நலனுக்காக பாடுபடும் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல் பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி உள்ள திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *