
யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுக் காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்று அவர்கள் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களை ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டில் இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், நல்லதம்பி நகுலேஸ்வரி மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 மற்றும் 6 ஆம் திகதிகளிலும், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதியிலும் இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை, சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, அவர்களின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்றுக்காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.